பிபிலை, மெதகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கைப்பற்றப்பட்ட கள்ளின் அளவை குறைவாக குறிப்பிட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், சந்தேகநபரின் முன்னைய குற்றச் செயல்களை குறிப்பிடாமல் இருக்கவும், எதிர்காலத்தில் இது தொடர்பில் அவசியமான உதவியை வழங்கவும் இவ்வாறு இலஞ்சத்தை பெற்றுள்ள குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மெதகம நகரில் வெற்றிலை வியாபாரம் மற்றும் பகுதி நேர கள்ளு இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நபரிடம் நீண்டகாலமாக இலஞ்சம் பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் (30) அவரது கடையில் வைத்து இலஞ்சப் பணத்தை பெறும் போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்றிற்கு சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தும்போது முன்னர் செய்த தவறுகள் தொடர்பில் அறிக்கையிடும் பணியைப் புரியும், மெதகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் நீண்ட காலமாக தாம் நடத்தி வரும் கள்ளு இறக்கும் தொழில் தொடர்பில் அடிப்படையற்ற வகையில் வழக்குப் பதிவு செய்யாமலிருத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சம் கோரி வந்துள்ளார். இந்நிலையிலேயே குறித்த கடை உரிமையாளர் அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
சந்தேகநபரை பிபிலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடரந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.