சமூக பாதுகாப்பு வரி என்ற பெயரில் வற் வரியுடன் மேலும் மறைமுக வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வரி அதிகரிப்பினால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கும், தற்போதைய சமூக பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காண முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுத்தொகை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சமூக பாதுகாப்பு என்பது முக்கியமானது .தேவையானவர்களுக்கு அந்தப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
மறைமுக வரிகளை நீக்கி நேரடி வரிகளை அறவிடும் நோக்கிலேயே இதனை கொண்டு வருவதாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறினாலும் இது மறைமுக வரியாகவே வரவுள்ளது.
அத்துடன் இது சமூக பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அரசாங்கத்தின் செலவுகளுக்கு இந்த வரிகள் பயன்படுத்தப்படாது என்றும் அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஆரம்பத்தில் 8 வீத வரி இருந்தது. இதனுடன் இணைத்தே 2.5 வீத வரியை இணைக்க தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பில் அன்றே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்தோம். இந்த வரியை 2.5 வீதம் என்று கூறினாலும் 5 வீதமாவது அறவிடப்படும் என்றோம்.
இதனால் இதுவொரு குழப்பமான வரியே. இந்நிலையில் 8 வீதத்தில் இருந்த வற் வரி 12 வீதமாகிஇ பின்னர் 15 வீதமாகியது. இதனை தொடர்ந்து மீண்டும் 5 வீதம் அல்லது 7 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்படுகின்றது.
இவ்வாறு இரண்டு வித வரிகளை அறிமுகப்படுத்தினால் அது நெருக்கடியானது. இது வற் வரியென்றால் மக்களுக்கு மறைக்காது உண்மைகளை கூறி கேளுங்கள்.
2019 டிசம்பரில் வரிகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் நிதி அமைச்சுக்கூட அறிந்திருக்கவில்லை. அதனாலேயே நெருக்கடிகள் அதிகரித்தன.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யோசனைக்கமையவே சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலம் கொண்டு வருகின்றது. ஏன் இதனை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.