இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல் குறித்து இந்திய புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் எதிர்வரும் 18ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக ‘த ஹிந்து’ வில் வெளியான செய்தி குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து இந்திய புலனாய்வு பிரிவினரிடம் மேலதிக விபரம் கோரப்பட்டமைக்கு அமைய பொதுவானதொரு தகவலாக இது வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என இந்திய புலனாய்வு தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் தருணங்களில், அது குறித்து விசாரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும், இந்திய புலனாய்வுத் தரப்பினர் அறியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையிலும் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதுடன் பாதுகாப்பு தரப்புக்கும் உரிய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.