இந்தியாவில் சென்னை நகரை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்துவிட்டு காதின் துவாரத்தை அடைக்க சென்று காது அழுகி பரிபோயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்பு விளம்பரங்கள் போன்றவற்றை பார்த்துவிட்டு சென்னையை சேர்ந்த இளம்பெண்ணொருவர் தனது காதில் உள்ள துவாரத்தை அடைக்க அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கு கொடுத்த மருந்தை எடுத்துக்கொண்டதால் இளம்பெண்ணின் காது அழுகிபோயுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
இது குறித்து அப் பெண் நீதிமன்றில் தெரிவித்ததாவது:, “இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்துவிட்டு காதில் உள்ள துவாரத்தை அடைப்பது தொடர்பான ஒரு நாள் வகுப்பு சென்றேன்.
இதற்காக ரூ.2,500 கட்டணமாக கொடுத்தேன். நான் பங்கேற்ற வகுப்பில் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக எனது காதில் உள்ள துவாரத்தை அடைகிறேன் என்று கூறி காதில் கிரீம் போல எதையோ தடவி துவாரத்தை அடைத்தனர். ஆனால் துவாரம் அப்படியேத்தான் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல காதில் அவர்கள் தடவிய கிரீம் மிகுந்த அரிப்பை ஏற்படுத்தி தீராத வலியையும் உண்டாக்கியது. தொடர்ச்சியாக போன் செய்து பார்த்ததில் எவ்விதமான பதில் இல்லாததால் நாங்கள் ஒரு வாரம் கழித்து அவர்களுடைய அழகு நிலையத்திற்கு சென்று பார்த்தோம்.
அங்கு சென்ற பிறகு காது அழுகிய நிலைமைக்கு வந்துவிட்டது என்று கூறி ஒரு ஆயின்மென்ட் கொடுத்து அதை பயன்படுத்துமாறு கூறினார்கள். அப்பொழுது கூட வைத்தியர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை.
அவர்கள் கொடுத்த கிரீமை பயன்படுத்தியதால் காது முற்றிலுமாக அழுகி அறுந்து விழுந்துவிட்டது. இது குறித்து நாங்கள் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை எனவே பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தோம். என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.