இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது.
2-வது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது.
காசா சிட்டியை இஸ்ரேல் ராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் ராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.
சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள்.
இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம்
அருகே தாக்குதல் நடந்தது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் ராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.