13ஆம் திருத்தமே அரசியல் யாப்பிலுள்ள தீர்வு: தமிழ்க் கட்சிகளிடம் உறுதியாக கூறிய இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
167

13ஆம் திருத்தமே அரசியல் யாப்பிலுள்ள தீர்வு. ஆகவே, அதைத்தான் நடைமுறைப் படுத்த முடியும். 13ஐயே நடைமுறைப்படுத்தாத அரசாங்கங்களிடம் எவ்வாறு வேறு தீர்வை எதிர்பார்ப்பீர்கள்? முதலில் 13ஐ நடைமுறைப்படுத்தக்கோரி – அதன் பின்னர் மேற்கொண்டு நகர்வதே புத்திசாதுரியமானது என ஒன்றாக தன்னை சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிர மணியம் ஜெய்சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், 13ஆம் திருத்தச் சட்டம்- மாகாண சபைகளே இனப் பிரச்னைக்கான தீர்வு என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். இந்திய தரப்பின் அழைப்பின்பேரில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம். ஏ. சுமந்திரன், க. சுரேஷ் பிறேமசந்திரன், என். சிறீகாந்தா ஆகியோரை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் சந்தித்தார்.

இதன்போது, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் போக்ளேயும் உடனிருந்தார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், ‘இலங்கை மிகப்பெரிய நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நல்லிணக்கம், அரசியல் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இனப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இனப்பிரச்னைக்கு தீர்வாக 13ஆம் திருத்தமே- மாகாண சபைகளே தீர்வு – இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே என்றும்கூறினார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் 13ஆம் திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்திய பின்னர் சமஷ்டி தீர்வு குறித்தும் வலியுறுத்தின. மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் எழுதிய கடிதத்தில் 13ஐ வலியுறுத்தியுள்ளன. இந்த சந்திப்பில் பங்கேற்ற ஒரேயொரு கட்சியை தவிர ஏனைய கட்சிகள் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டன.
ஆனால், 13ஐ நடைமுறைப்படுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, 13ஆம் திருத்தமே அரசியல் யாப்பிலுள்ள தீர்வு.
ஆகவே, அதைத்தான் நடைமுறைப்படுத்த முடியும். 13ஐயே நடைமுறைப்படுத்தாத அரசாங்கங்களிடம் எவ்வாறு வேறு தீர்வை எதிர்பார்ப்பீர்கள்? முதலில் 13ஐ நடைமுறைப்படுத்தக் கோரி, அதன் பின்னர் மேற்கொண்டு நகர்வதே புத்தி சாதுரியமானது என சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அறிவுறுத்தினார்.