48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டம் வட மாகாணம் சம்பியன் பட்டத்தை சூடியது ; மரதனில் சண்முகேஸ்வரனுக்கு வெள்ளி

0
61

மஹியங்கனையில் வார இறுதியில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அம்சமான பெண்களுக்கான ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டப் போட்டியில் வட மாகாணம் சம்பியனானது.

வட மாகாணம் பெண்கள் அணி சம்பியனானது இது 3ஆவது தடவையாகும். இதற்கு முன்னர் 2017இலும் 2018இலும் வட மாகாண பெண்கள் அணி சம்பியனாகி இருந்தது.

73 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபற்றிய வட மாகாணத்தைச் சேர்ந்த நான்கு யுவதிகளும் போட்டியை முதல் 10 இடங்களுக்குள் நிறைவு செய்தததை அடுத்து சம்பியன் பட்டம் வட மாகாணத்துக்கு வழங்கப்பட்டது.

அப் போட்டியில் வட மாகாணம் சார்பாக பங்குபற்றிய பாலசிங்கம் தனுசுஜந்தினி (2:55.02) 4ஆம் இடத்தையும் நந்தீஸ்வரன் ராதிகா (2:55.59) 5ஆம் இடத்தையும் இந்திரசித்து தமிழரசி (3:15.25) 8ஆம் இடத்தையும் சதீஸ்வரன் ரெஜினா (3:25.21) 10ஆம் இடத்தையும் பெற்றனர்.

சைக்கிளோட்டத்தில் ஏதேனும் ஒரு அணியை சேர்ந்த நால்வர் முதல் 10 இடங்களுக்குள் நிறைவுசெய்தால் அந்த அணிக்கே சம்பியன் பட்டம் வழங்கப்படும்.

இதன் அடிப்படையிலேயே வட மாகாணம் சம்பியனானது.

மரதன் ஓட்டப் போட்டியில் சண்முகேஸ்வரன் 2ஆம் இடம்

ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் அட்டன், வெலிஓயாவை பிறப்பிடமாகக் கொண்ட குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட சண்முகேஸ்வர்ன் அப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 37 நிமிடங்கள், 23 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

அப் போட்டியில் பங்குபற்றிய நுவரெலியா ஒலிஃப்ன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (மத்திய மாகாணம் 2:28.41) 4ஆம் இடத்தைப் பெற்றார்.

ரி. ரத்னபால (கிழக்கு மாகாணம் 2:25.55) தங்கப் பதக்கத்தையும் அமில சனத் குமார (தென் மாகாணம் 2:27.11) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட  லிந்துல அக்ரகந்த தோட்ட வீராங்கனை ஆறுமுகம் அனுஷா (3:31.13) 7ஆம் இடத்தைப் பெற்றார்.

இப் போட்டிகளுக்கு நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.

நெஸ்லெ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சவீவ வீரசிங்க அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.