மாலம்பே, கடுவலை மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் எனும் போர்வையில் இயங்கி வந்த 6 விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் திறக்கப்படும் குறித்த நிலையங்கள் தொடர்பில் பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடுவலை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டதோடு குறித்த நிலையங்கள் விபசார நிலையம் என உறுதிப்படுத்திய பின்னரே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூர பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் வேலைக்கு வந்து அதிக வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையத்தில் வேலை செய்து பணம் சம்பாதித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.