6 ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை

0
164

ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பானுக்க ராஜபக்ஷ அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், ப்ரமோத் மதுஷான பெற்ற 4 விக்கெட் என்பன ஆசிய கிண்ணத்தை இலங்கை சுவீகரிப்பதற்கு உதவியாக அமைந்தன.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தானின் பந்துவீச்சுகளை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.
குசல் மெண்டிஸ் 0, பெத்தும் நிஸ்ஸன்க 8, தனுஷ்க குணதிலக்க 1, தனஞ்சய டி சில்வா 28, தசுன் ஷானக்க 2 என அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
எனினும் தொடர்ந்து களமிறங்கிய பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
இதன்போது வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ 45 பந்துளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 71 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அவருடன் பிரிக்கப்படாத 7 ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த சாமிக்க கருணாரட்ன 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் பெற்றது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பாக ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
171 ஓட்டங்களை பெற்றால் ஆசிய சம்பியன் என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் ஓவரிலேயே 12 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து 4ஆவது ஓவரில் பாகிஸ்தான் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ப்ரமோத் மதுஷானின் பந்துவீச்சில் பாபர் அஸாம் 5 ஓட்டங்களிலும், பக்கார் ஸமான் ஓட்டமேதுமின்றியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மொஹமத் ரிஸ்வானும் இப்திகார் அஹ்மத்தும் 3ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இப்திகார் அஹ்மத் 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மொஹமத் நவாஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேற பாகிஸ்தான் 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 61 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஹசரங்க வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில் சிறப்பாக ஆடி வந்த மொஹமத் ரிஸ்வான் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் ஆசிப் அலியின் விக்கெட்டை வனிந்து ஹரசங்க கைப்பற்றினார்.
அதே ஓவரில் குஷ்தில் ஷாவின் விக்கெட்டையும் ஹசரங்க வீழ்த்த இலங்கையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.
18ஆவது ஓவரில் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஷதாப் கானும் 19ஆவது ஓவரில் மதுஷானின் பந்துவீச்சில் நசீப் ஷாவும் ஆட்டமிழக்க பாகிஸ்தானின் ஆசிய கிண்ண கனவு தவிடுபொடியானது.
20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 06 ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அதிகபட்சமாக இந்தியா 07 முறை ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி சார்பில் மதுசான் 04 விக்கெட்களையும் கசரங்க 03 விக்கெட்களையும் கருணாரட்ன 02 விக்கெட்களையும் தீக்சன 01 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பானுக ராஜபக்ஸவும் தொடராட்ட நாயகனாக வனிந்து கசரங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.