எமது மக்கள் சார்ந்த பிரச்னைகளை திசைதிருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பில் எழுந்த பிரச்னையை ஆராய கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக்காரணமாக அந்தப் பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் காணப்படும் தொல்பொருள் தொடர்பிலான பிரச்னையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பில் சாணக்கியன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு:
‘ திடீரென்று வருகை தந்த அமைச்சர் எனக்கோ அல்லது அங்குள்ள மக்களுக்கோ அறிவிக்கவில்லை.
ஏற்கனவே அமைச்சருடன் கொழும்பில் நடந்த சந்திப்பொன்றின்போது தொல்பொருள் சம்பந்தமான பிரச்னைகள் பற்றியும் மற்றும் காணிகள் அபகரிக்கப்படுவதை எடுத்துரைத்த அதேவேளை அமைச்சர் இங்கு வந்து நேரடியாக எம்மையும், பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்டவர்களையும் அழைத்து பிரச்னைகள் சம்பந்தமாக நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பேசி தீர்மானிப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் இவரது திடீர் வருகையானது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அங்கு நான் சென்றேன். அவருடன் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சரும் வந்திருந்தார்.
இவர் வர இருப்பதை சிறிது நேரத்துக்கு முன்னரே அறிந்த நான் அவரை சந்திக்க பல வகைகளில் நடவடிக்கை எடுத்திருந்தேன்.
அவற்றுக்கும் முறையான பதில் எனக்கு கிடைக்கவில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அங்கு சென்றிருந்தேன்.
இந்நிலையில் சில சிங்கள ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பிரசுரித்திருப்பதை காணமுடிந்தது. அவர்கள் எமது பிரச்னையை வேறு வழியில் திசை திருப்ப முற்படுகின்றனர். மக்கள் இவற்றை மற்றும் எமது கோரிக்கைகளை சரியான முறையில் ஆராய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.