நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘முன்மாதிரியான இளைஞர்கள் பசுமையான இலங்கை’ வேலைத்திட்டம் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இளைஞர் விளையாட்டு அமைச்சின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு ஏறாவூர் நகரில்
இன்று இடம்பெற்றது.
ஏறாவூர் அல்முனீறா மகளிர் மகா வித்தியாலய சூழமைவு வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, பிரதேச உதவிச் செயலாளர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்
உட்பட பலரும் கலந்து கொண்டு துப்பரவாக்கல் மற்றும் மரம் நாட்டும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வைத் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஏறாவூர் பிரதேச செயலாளர், பசுமையான நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி
வருவதாகவும், இதனை மேலும் சிறப்பாக முன்னெடுத்து பசுமையான நகரமாக உருவாக்குவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.