வாகன விபத்துக்களில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

0
131

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற  வாகன  விபத்துக்களில்  14 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெலவத்த பிரதேசத்தில்  மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த சிறுவனும் வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  குறித்த  சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 14 வயதுடைய நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால்  முன்னால் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறி  மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 58 வயதுடைய விநாயகபுரம், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் களுத்தறை- மதுகம பிரதான வீதியின் கடுகுருந்த பிரதேசத்தில் வீதியை கடப்பதற்கு முயற்சித்த நபர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. தெற்கு களுத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.