இஸ்ரேல் படையினரின் தொடர் தாக்குதல்களால் காசாவில் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக இரவு வேளைகளில் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால் நிலைமை மோசமாகியுள்ளது.
இரு தரப்பு மோதலால் 11 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் 30 பேர் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படையினரால் வார இறுதியில் மூன்று அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் ஈராக் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அந்நாட்டுப் பிரதமர் மொஹமட் ஷியா அல்-சூடானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காசாவில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதால் தற்காலிகமாகவேனும் போர் நிறுத்தம் அவசியம் என ஈராக் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, காசாவில் தொற்றுநோய் பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் நிர்வகிக்கப்படும் அகதி முகாம்களில் ஐந்து இலட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் தங்கியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக உள்ளதால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவாச நோய்கள், வயிற்றுப் போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும் புதிதாக முகாம்களுக்கு வருவோர் வீதிகளில் உறங்குவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.