ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கிணைவாக யூ.என்.டி.பீ ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் நிதியுதவியுடன், நாட்டின் நான்கு
மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை அதிகரிக்கச் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், இத்திட்டத்தின் மூலம் இலத்திரனியல் மயமாக்கப்படுகின்றன.
இதற்கமைய இன்று மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையில் வருமான முகாமைத்துவ முறை மற்றும் பொதுமக்கள் குறைகேள் முறை ஆகிய துறைகளை இலத்திரனியல்
மயப்படுத்துவதற்கான இரண்டு வகையான மென்பொருள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
சபையின் செயலாளரும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான ஹமீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.
பிரகாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது மங் கியூவா மற்றும் கெட் இருபது இருபது ஆகிய இரண்டு நிகழ்நிலை மென்பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
பொதுமக்கள் தமது ஆதன வரி முதலான கொடுப்பனவு செலுத்துவதை இலகுபடுத்தும்நோக்குடன் கெட் இருபது இருபது மென்பொருள் பயன்படுத்தப்படவுள்ளது.
இதேபோன்று பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு மங் கியூவா என்ற தொலைபேசி செயலி முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன், இத்திட்டத்தினை அடுத்த ஒரு
வருடகாலத்திற்கு செயற்படுத்துவதற்கான செலவுகளை யு.என்.டி.பீ பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் யூ.என்.டி.பீ. திட்ட இணைப்பாளர் சாமிர் சாலி, மாவட்ட இணைப்பாளர் சுமித்ரா, சபையின் கணக்காளர் ஆர்.எப். புஷ்றா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பில் இலத்திரனியல் மயப்படுத்தலுக்கான மென்பொருள் அறிமுக நிகழ்வு இன்று நடைபெற்றது.