மட்டக்களப்பில் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

0
127

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் அடிக்கடி கோளாறு ஏற்படுவதன் காரணமாக, போக்குவரத்தில் பயணிகள் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
புலிபாய்ந்த கல் பிரதான வீதியில் கோஸ்வே நீர் நிரம்பி காணப்படுவதனால், பொண்டுகல் சேனை, குடும்பிமலை, கோராவெளி, பூலாக்காடு போன்ற பல்வேறு கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள 250 குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் இவர்களுக்கான உலர் உணவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
கிண்ணையடி மீன் பிடி வீதியில் ஆற்று வெள்ளம் காரணமாக கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் ஸ்ரீ கனக துர்க்கா அமைப்பு, தமிழர் உணர்வாளர் அமைப்பு என்பன உலர் உணவு வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்தது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஓட்டமாவடி,வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு,மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை,பதுரியா நகர் மாஞ்சோலை,தியாவட்டவான்,பாலைநகர் போன்ற கிராமங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில், வெள்ள நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீரோடையின் நீரோட்டத்துக்கு தடையாக உள்ள பாரிய அளவான ஆற்றுவாழைகள் மற்றும் குப்பை கூழங்கள் இன்று பதுரியா மாஞ்சோலை அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கழக வீரர்கள், பிரதேச சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வெள்ள நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.