முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் போது, அவர் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு தான் உதவியதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு கோட்டாபய ராஜபக்ச செல்வதற்கான வசதிகளை தான் ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட சிலர் நன்கு அறிந்திருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை தான் எதிர்ப்பதில்லை எனவும் அப்போதைய ஆட்சி காலத்தில் காணப்பட்ட சில முறைமைகளை மாத்திரம் எதிர்த்ததாகவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தன்னை தவறாக பிரதிபலிக்கும் வகையில் கோட்டபாய ராஜபக்ச அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் பொறுப்பான ஒரு தேரராக இது தொடர்பில் தான் விளக்கமளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தான் மாத்திரமின்றி மகாநாயக்க தேரர்கள் அனைவரும் காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆதரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.