லங்கா புட்போல் கப் இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி

0
74

கண்டி எவ்.சி. அணிக்கும் கோல் எவ்.சி. அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி சிட்டி லீக் மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இறுதிப் போட்டி ஆரம்பத்தில் மே 18ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஒரு தினத்தால் பிற்போடப்பட்டிருந்தது.

ஆனால், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேலும் ஒரு வாரத்தால் இறுதிப் போட்டியை பிற்போட நேரிட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படாததால் கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப் ஸ்தாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான சய்வ் யூசுபின் எண்ணக்கருவில் லங்கா புட்போல் கப் நொக் அவுட் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நொக் அவுட் போட்டிக்கு சய்ப் யூசுப் பூரண அனுசரணை வழங்கியுள்ளார்.

இந்த நொக் அவுட் போட்டியில் சென்ட்ரல் எவ்.சி. (கண்டி), கலம்போ எவ்.சி. (கொழும்பு), ஈஸ்டர்ன் எவ்.சி. (கிழக்கு), கோல் எவ்.சி. (காலி), ஜெவ்னா எவ்.சி. (யாழ்ப்பாணம்), களுத்தற எவ்.சி. (களுத்துறை), கண்டி எவ்.சி. (கண்டி), நிகம்போ எவ்.சி. (நீர்கொழும்பு) ஆகிய அணிகள் பங்குபற்றின.

கண்டி எவ்.சி. கால் இறுதிப் போட்டியில் நிகம்போ எவ்.சி.யை 9 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் அரை இறுதிப் பொட்டியில் ஜெவ்னா எவ்.சி.யை 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வெற்றிகொண்டது.

கோல் எவ்.சி. கால் இறுதிப் போட்டியில் சென்ட்ரல் எவ்.சி.யையும் அரை இறுதிப் போட்டியில் கலம்போ எவ்.சி.யையும் ஒரே கோல் எண்ணிக்கையான 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு லங்கா புட்போல் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

அதிசிறந்த வீரருக்கு தங்கப் பாதணி வழங்கப்படும்.

அத்துடன் எட்டு அணிகளுக்கும் பங்குபற்றலுக்கான கட்டணமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. தூரப் பிரதேசங்களிலுள்ள அணிகளுக்கு போக்குவரத்துச் செலவுகளும் வழங்கப்பட்டது.