மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை தேர்தல் நோக்கத்துக்காக பகடைக்காய்களாக பயன்படுத்தக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது.எனினும் அந்தத் தொகையை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. உண்மை நிலையை பார்க்கும்போது தேர்தலை நோக்காகக் கொண்டே இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.
தேர்தல் நோக்கத்துக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தக் கூடாது. முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றுக்கு சென்று தடை உத்தரவு பெற்றுக்கொண்டால் என்ன நடக்கும்?
ஆகையால் அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.