தம்புள்ள சிக்சஸ் அணித் தலைவராக முகமது நபி !

0
68

ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான தம்புள்ள சிக்சஸ் அணியின் தலைவராக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளார். முகமது நபி, துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அணியை வழிநடத்தும் தலைமைத்துவ அனுபவத்தையும் கொண்டவர்.

நபியின் தெரிவு குறித்து தம்புள்ள சிக்சஸ் அணி நிர்வாகம் தெரிவிக்கையில்,“இந்த ஆண்டு எமது அணிக்கு முகமது நபி தலைவராக தெரிவுசெய்யபட்டமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.அவரது அனுபவமும் தலைமைத்துவமும் அணியை சிறப்பாக வழிநடத்த ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறோம் ” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான இலச்சினை, அணிகளின் இலச்சினைகள், போட்டி அட்டவணை ஆகியவற்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் புதன்கிழமை (26) வெளியிட்டது.

இம்முறை லைக்கா ஜெவ்னா கிங்ஸ், கோல் மாவல்ஸ், தம்புள்ள சிக்சஸ், கலம்போ ஸ்ட்ரைக்கஸ், கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயம் கோல் மாவல்ஸ் அணிக்கும்   கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் இடையில் பல்லேகலையில் ஜூலை முதலாம் திகதி நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகிறது.

போட்டிக்கு முன்னதாக கோலாகல ஆரம்ப விழா நடத்தப்படவுள்ளது.இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இப் போட்டியில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடும்.கண்டி பல்லேகலையில் 5 போட்டிகள் நடத்தப்படும். ஏனைய 15 போட்டிகளும் இறுதிச் சுற்றில் 4 போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 22ஆம் திகதி நடைபெறுவதுடன் 23ஆம் திகதி இருப்பு நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.