இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, மத்திய வரிசை வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் இலங்கைக்கு ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின.
அத்துடன் துனித் வெல்லாலகேயும் அக்கில தனஞ்சயவும் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. இந்த இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 7 பந்துவீச்சாளர்களில் 6 பேர் விக்கெட்களை வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.அவர்களில் அக்ஸார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 231 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா இன்னும் சற்றுநேரத்தில் பதிலுக்கு துடுப்பெத்தாடவுள்ளளது.இலங்கை அணியில் மொஹமத் ஷிராஸ் அறிமுக வீரராக விளையாடுகின்றார்.