மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொதுமக்கள் இன்றைய தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபானசாலையா, அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் போன்ற பதாகைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறித்த மதுபானசாலை திறக்கப்படுமானால் சமூக கலாசார சீர்கேடுகள், சமுக விரோத செயற்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்ட மகஜர் ஒன்று இதன்போது கையளிக்கப்பட்டது.