கொழும்பில் இருக்கும் சுமந்திரன் எம்.பி க்கு யாழ்ப்பாண மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தபோது அந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடினேன். உண்மை நிலைவரம் என்னவென்பதை அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
சுமந்திரன் கொழும்பில் இருக்கிறார். வடக்கு மக்களின் மனநிலை அவருக்கு புரியாது. சிறீதரன் போன்றோர் ஊரில் மக்களுடன் இருக்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவ்வாறான தலைவர்களுக்கே புரிந்துகொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கில் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும்.
எமக்கு கிடைத்த கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க முதலிடத்திலும் அநுர குமார திசாநாயக்க இரண்டாம் இடத்திலும் சஜித் பிரேமதாச மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.