இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிறுவனின் தாய், தந்தை உட்பட மூவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை பதில் நீதிவான் தேசபந்து சூரியபடபெத்தி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலின் போது வீட்டிலிருந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவன் காயமடைந்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.