நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கும் இன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா மூன்றாம் அலையில் நால்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி – 01, அன்னமலை – 01, மத்திய முகாம் – 01, மத்தியமுகாம் – 06 ஆகிய கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் 45 பேருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வீ.வினோதினி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எச்.எம்.ஜாபீர்,ஏ.எம்.றம்ஸீன், பற்சிகிச்சையாளர் எல்.ஜெஸ்மின் நகார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று பீ.சீ.ஆர்பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதேவேளை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆனந்தனின் வழிகாட்டலில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களுக்கு கொரோனா தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கைகளை நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள பொது மக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்கள் சேவை பெற வருகை தரும் இடங்களில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் அரச சேவையை பொது மக்களுக்கு தடையின்றி முன்கொண்டு செல்லும் நோக்குடன் பொது மக்களுக்கு சேவை வழங்கும் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான அன்ரிஜன் பரிசோதனை பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இருகட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 2 உத்தியோகத்தர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.