அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 6,7 திகதிகளில் – பாராளுமன்ற செயலாளர் நாயகம்

0
130

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ராேகணதீர தெரிவித்தார்.   

பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. 

இதன்போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் 8ஆம் திகதி மாலை 5,30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.  

அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கும் பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் பாரிய மருந்து தட்டுப்பாடு, தரம் குறைந்த மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது, அத்துடன் அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதனால் வைத்தியசாலை கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன் வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பாரிய பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண  சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி வருவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்த மாதம் ஆரம்பத்தில் சபாநாயகரிடம் கையளித்திருந்தன. அதன் பிரகாரமே தற்போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு 8ஆம் திகதி மாலை பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.