பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான 2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நாளை 12 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவித்தலை நேற்று ( 10) உயர் நீதிமன்றம் மனுக்களை ஆராய்ந்த போது அறிவித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் நேற்று ஆராயப்பட்டன.
இதன்போது இம்மனுக்கள் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக்க குறிப்பிட்டார்.
மனுதாரர்கள் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால கட்டளைகள் அடங்கிய வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ள நிலையில், அதனை ஆராய்வதானால் கண்டிப்பாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமேனும் அவசியம் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக குறிப்பிட்டார். இந் நிலையிலேயே மனுக்களை நாளை 12 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான 2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட மூவர் இம்மனுக்களை தாக்கல்ச் செய்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர் முன்னாள் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்