காட்டு யானை மீது மோதி லொறி விபத்து ; இருவர் பலி, 6 பேர் காயம்

0
75

மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியிலிருந்து நாவுல நோக்கி பயணித்த சிறிய லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து மொரகஹகந்த – வதுருமுல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (5) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாரதி உட்பட ஒன்பது பேருடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியானது வீதியின் குறுக்கே வந்த காட்டு யானை மீது மோதியதில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து கொங்கஹவெல தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் இந்த லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக நாவுல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.