சம்பூரில் அகழ்வதற்கு நீதிமன்றம் உத்தரவு!!

0
11

எஸ்.கீதபொன்கலன்

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும்- மூதூர் நீதிவான் நீதிமன்றம்  புதன்கிழமை(06) உத்தரவிட்டுள்ளது.

மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய அகழ்வுகள் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையை பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் மூதூர் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளஸான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 26 ந் திகதி தொடர்ந்தும் நடத்துவது என்றும் நீதிமன்று தீர்மானித்தது.


இதுவரை இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது என்றும் மற்றையது 25 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவருடையது,அடுத்தது 40 இற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஒருவருடையது என்றும் இன்று வழக்கின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார்.

இன்றைய வழக்கில்  சட்டவைத்திய அதிகாரி மேலும்  கூறுகையில்

இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இவ் எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

இக்காணி அரச காணியாக உள்ள போதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று தொல்பொருள் திணைக்கழகம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

இவ் அறிக்கைகளை ஆராய்த பின்னரே நீதிமன்று அகழ்வு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜூலை 19 ந் திகதி மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இப்பகுதியில் நடந்தபோது,மனித மண்டையோடு,கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து 23 ந் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் பார்வையிட்டார்.அதனை அடுத்து சென்ற 30 ந் திகதி விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது.

அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி புதன்கிழமை(6)நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும்,இக் கூட்டத்தின் பின்னர் இவ் மனித எச்சங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் முடிவுசெய்யப்பட்டிருந்தது.