நாட்டில், வெறுமனே குறைகூறும் – விமர்சிக்கும் அரசியலை விடுத்து, நாட்டை மீட்க, அரசியல், கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைவோம் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று, நுவரெலியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற, நுவரெலியா மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலில், இவ்வாறு அழைப்பு விடுத்தார். நாட்டு மக்கள், கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்வது புரிகின்றது. எனினும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கடக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டில், மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
‘நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் பிரதேசமாகும். அதேபோல, அந்திய செலாவணியும் ஈட்டப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் மந்தபோசன பிரச்சினையும் இருக்கின்றது. அதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். கடந்த மே மாதம் அளவில், உரப் பற்றாக்குறை இருந்தாலும் தற்போது நிலைமை சீராக்கப்பட்டுள்ளது. நாம் தற்போது, உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தால், அடுத்த வருடம், உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படலாம். எனவே, எமது உணவு பாதுகாப்பு வேலைத் திட்டத்தை தொடர வேண்டும். ரஷ்யா – உக்ரைன் பிரச்சினை தீர்ந்தால், அத்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் இல்லையேல் தொடர வேண்டும். பண வீக்கத்தால், மக்கள் கஷ்டத்துக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். 2023 ஜனவரியில், கொப்பிகளை வாங்குவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நாம் மக்கள் படும் துன்பத்தை மறக்கவில்லை. அடுத்த வருடம் நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை, அரசியலுக்கு அப்பால் செய்ய வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு, ஒருமித்த கருத்துக்கு அனைவரும் வரவேண்டும். இதைவிட மாற்றுவழி இல்லை. நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு, அரசியல் செய்தது இல்லை. அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தினேன். ஒத்துழைப்பு கோரினேன். ஆனால், சிலர் பழைய முறையிலேயே அரசியல் நடத்த முற்படுகின்றனர். விமர்சனங்களை மட்டும் முன்வைக்கின்றனர்.
உரிய வேலைத் திட்டங்கள் இன்றி விமர்சிப்பதில் பயன் இல்லை. நாட்டு மக்கள் அரசை மட்டும் விமர்சிக்கவில்லை. முழு நாடாளுமன்றத்தையும் விமர்சிக்கின்றனர்.
எனவே, மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நுவரெலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நுவரெலியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். நுவரெலியா மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, அரச அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி, பல விடயங்களை ஆராய்ந்தார்.
இதேவேளை, விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும் எனவும், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள பயிரிடக் கூடிய இடயங்களை, உற்பத்திக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உரப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டு வருகின்றது. களைக்கொல்லி உள்ளிட்டவையும் வழங்கப்படும். அதாவது, விவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அரிசியில் போன்று, மரக்கறி உள்ளிட்டவற்றிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது.
அதனை அனைவரும் பொறுப்பேற்கலாம். கால்நடை வளர்ப்பு மற்றும் தேசிய பால் உற்பத்தி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றின் அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என குறிப்பிட்டார்.