புனிதமான எமது தொழிலை அரசாங்கம் புதினமாகப் பார்க்கின்றது – ஆசிரியர்கள் கவலை

0
157

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் – அம்பிளாந்துறை ஓடத்துறையில் சேவையிலீடுபடும் படகுப்பததையில் கட்டணம் செலுத்தி தாம் பயணிக்க முடியாது என தெரிவித்ததையடுத்து குறித்த பாதைப்போக்குவரத்து சுமார் 3 மணித்தியாலங்கள் குருக்கள்மடம் துறையில் தடைப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையின் புதிய தவணைக்கான ஆரம்பநாளான இன்று திங்கட்கிழமை குறித்த படகுப் பாதை ஊடாக போக்குவரத்துச் செய்யும் அதிகளவு அதிபர், ஆசிரியர்களும், ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகஸ்த்தர்களும், காலை 7 மணிக்கு படகுப்பாதை படுவாங்கரைப் பகுதிக்குப் புறப்படும் நேரத்திற்கு வழக்கமாகச் செல்வது போன்று குருக்கள்மடம் கறைக்குச் சென்றுள்ளனர். 

வழக்கம் போல் அனைவரும் அதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதையில் ஏறியுள்ளனர். அங்கிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்து கட்டணம் செலுத்துமாறு தெரிவித்ததையடுத்து அங்கு குழப்ப நிலமை ஏற்பட்டுள்ளது.

தாம் இதுவரை காலமும் இப்படகுப் பாதையூடாக எதுவித கட்டணங்களுமின்றியே பயணம் செய்து அதிக கஷ்டப் பிரதேசங்களுக்கு மிகவும் தொலை தூரம் சென்று மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றோம். திடீரென எம்மிடம் நிதி வசூலிப்பது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்ததையடுத்து குறித்த பாதைப் போக்குவரத்து சேவையிலீடுபடாமல் காலை 9 மணிவரையில் தடைப்பட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்த அரச உத்த்தியோகஸ்த்தர்கள் தம்மால் கட்டணம் செலுத்தி இப்பாதையில் பயணம் செய்ய முடியாது என தெரிவித்து கடமைக்குச் செல்லாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

10 வருடங்களைக் கடந்தும் மிக நீண்டதூரம் பணயம் செய்து அதி கஷ்டப்பாடசாலை மாணவர்களுக்கு நாம் கல்வி புகட்டி வருகின்றோம்.

தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், எமக்கு அரசாங்கத்தால் மாதாந்தம் வழங்கப்படும் வேதனமே போதாது. “எமது புனிதமான தொழிலை அரசாங்கம் புதினமாகப் பார்ப்பது எமக்கு கவலையளிக்கின்றது”. 

எனவே இதுவரை காலமும் நடைமுறையிலிருந்தது போல் எதுவித கட்டணங்களுமின்றி நாம் பயணம் செய்து  எமது சேவையைத் தொடர்வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.

சுமார் 5 வருடங்கள் அதி கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றினால் நாங்கள் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியும்.

ஆனாலும் அவ்வாறு இடமாற்றம் பெறாமல் 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் அப்பகுதி மாணவர்களின் நலன்கருதி இதுவரையில் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்காமல் சேவை செய்து வருகின்றோம். 

இந்நிலையில் நாம் பயணிக்கும் படகுப்பாதைக்கும் கட்டணம் அறவீடு செய்யதால் நாம் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல நேரிடும் இது தொடரிபில் எமது உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம் என இதன்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.