போதைப்பொருள் கடத்தலுக்காக புதிதாக பலர் இணைந்துள்ளனர்

0
90

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்காக புதிதாக பலர் இணைந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குத்  தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மைக்கால நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் பல புதிய கடத்தல்காரர்கள் இணைந்துள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பல புதிய கடத்தல்காரர்களைக் கைது செய்வது இலகுவான விடயமல்ல  என பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் புதிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலோ, பொலிஸ் பிரிவிலோ எவ்வித தகவலும் இல்லாததால் இவர்களைக் கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .  அத்துடன்,  ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிலும், புதிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இணைந்துள்ளனர்.  

இந்த புதிய கடத்தல்காரர்கள் துபாயில் இருந்துகொண்டு கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது . அண்மைய நாட்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் சோதனைகளில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான கடத்தல்காரர்கள் புதிய கடத்தல்காரர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளன.