திருகோணமலை-வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வான் எல பகுதியில் இருந்து சிறாஜ்நகர் 97ஆம் கட்டைக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் குறித்த பெண் வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் சிராஜ் நகர்- 97 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஆர்.பௌவுசியா எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை வான்-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.