முதலீடு இல்லாத காரணத்தால் இலங்கை ரயில்வே மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது , ரயில் சேவைகள் இரத்து மற்றும் புகையிரத பயணிகள் அனுபவிக்கும் தாமதங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.“இலங்கை ரயில்வே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. திறமையான ரயில்வே சேவையை முன்னெடுக்க, முதலீடு தேவை.
கடலோர ரயில் பாதைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அத்துடன் பயணிகள் பெட்டிகள், ஸ்லீப்பர்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி தேவை ‘ என்று அமைச்சர் விளக்கினார்.ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்தியாவின் உதவியுடன் ரயில் பாதைகள் கடைசியாக மேம்படுத்தப்பட்டதாக குணவர்தன குறிப்பிட்டார்.“இந்திய கடனுதவியுடன் வடக்கு ரயில் பாதை மேம்படுத்தப்பட்டு வருகிறது. 20 ரயில் இன்ஜின்களை சலுகையின் கீழ் பெற இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்றார்.
நலிவடைந்த புகையிரதத் துறையை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கான நாட்டின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை இலங்கை ரயில்வே தொடர்ந்து குறைபாடுகளை சந்திக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.“குறைந்தபட்சம் 50 முதல் 60 வருடங்கள் பழமையான ரயில்களுடன் சேவைகளை பராமரிப்பதற்காக இலங்கை ரயில்வே ஊழியர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்” என்று குணவர்தன கூறினார்.