மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 50-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிடஇறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வில் 49 அமர்வின்கூட்டறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போரதீவுப்பற்றில் இயங்கும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் சாதாரண மக்களுக்கு எரிபொருளை வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு வழங்குவது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார பிரச்சினைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை சபையில் முன்னெடுத்தனர்.
பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்திலும் ஈடுபட்ட உறுப்பினர்கள் கண்டன தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினர்.
இதன்போது தமிழர் ஐக்கிய சுதந்திரக்கட்சியின் சுயேட்சைக்குழு உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.