கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் புரட்டி போட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீதிகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இதில் சிக்கி 32 பேர் இறந்தனர். 18 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இந்த நிலச்சரிவால் அந்தக் கிராமமே அழிந்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.