ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரம் மீது, மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில், 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.ஹாஸாவில் இருந்து, இந்த ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்பட்ட வேளை, அதனை இடைமறித்து அழித்ததாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இருப்பினும், இஸ்ரேலின் சேத விபரம், உயிர் சேதம் குறித்து, எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெற்கு ஹாஸாவில் உள்ள ரபா நகரம் மீது, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
போருக்கு பயந்து, வடக்கு ஹாஸாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், ரபா நகரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள், அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதனால், 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகள் மற்றும் பெண்கள் என, ஹாஸா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அத்துடன், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/05/2355374-hamas-1024x614.webp)
இந்த தாக்குதலுக்கு, பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலை அடுத்து, ஹாஸாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.ஏற்கனவே, ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், நிவாரண பொருட்கள் கிடைக்காததால், பட்டினியால் வாடி வருகின்றனர்.