பாடசாலை நேரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது
.இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இரண்டு தடவைகள் ஆசிரியர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.நாட்டின் தற்போதைய நிலையில், வேதனத்தை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே எதிர்கால பிள்ளைகளின் நலன் தொடர்பில் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும்.இதேவேளை, எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.