இலங்கையில் – வடக்கு மாகாணத்தில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. இவர்கள், கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என தமிழக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. அயல்நாட்டில் அதாவது இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழக புலனாய்வு பிரிவு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் சீன இராணுவத்தினரின் நடமாட்டம், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏனைய உயர்தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம். தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை வெளியாகியிருந்தது. இந்நிலையில், இத்தகைய ஊடுருவல்கள் வேறு சக்திகளாலும் நிகழ்த்தப்படலாம் என்றும் தமிழக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் அனலைதீவு, மீசாலை, சாவகச்சேரி பிரதேசங்களிலும், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சீன பிரஜைகளின் நடமாட்டம் உள்ளது. அவர்களின் நடமாட்டம் தமிழ் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்துக்கான வழியாகக் காணப்படுகின்ற கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம். வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தியாவின் செல்வாக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் எனவும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில், சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சர்ச்சைக்குரிய உண்மை என தமிழக கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் பொலிஸ் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.