இலங்கைக்கு எதிராக மென்ச்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதம் இருக்க 23 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இலங்கை அதன் முதன் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையைப் போன்றே இங்கிலாந்து துடுப்பாட்டத்திலும் மத்திய வரிசையில் ஹெரி புறூக், ஜெமி ஸ்மித் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து தமது அணியை பலப்படுத்தினர்.
இன்று காலை பெய்த மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பிற்பகல் 1.15 மணிக்கே ஆரம்பமானது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது. பென் டக்கெட் (18), டான் லோரன்ஸ் (30), ஒல்லி போப் (6) ஆகிய மூவரும் களம் விட்டகல இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தது.
ஜோ ரூட், ஹெரி புறூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஜோ ரூட் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெமி ஸ்மித்துடன் 5ஆவது விக்கெட்டில் மேலும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹெரி புறூக் 56 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அதன் பின்னர் ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர். கிறிஸ் வோக்ஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமி ஸ்மித் 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 58 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.