ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரை, மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது : மனோ கணேசன் அறிக்கை

0
135

நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பான அலட்சியப் போக்கு, தம்மை ஏமாற்றமடைய செய்துள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய வரவு செலவு திட்டம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி, ஐ.நா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில், இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக, பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை, ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அது நடைபெறவில்லை.
உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம் மக்களின் இக்குறைபாடுகள் பற்றிதான் அறிந்துள்ளேன் என்பதை, ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும். அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை, அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி, ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து, மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என, ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.
ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக, நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது வரவு செலவு திட்ட உரையில் கூறி உள்ளார்.
நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக, எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை, அவர் மறந்து விட்டார். அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.