ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயல்பாடுகள் தொடர்பிலேயே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயல்பாடுகள் தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதனை ஊடகவியலாளர்களுக்கோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கருத முடியாது.
ஜனாதிபதியால் கூறப்பட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. எனவே, இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவா தனிப்பட்ட காரணத்துக்காகவே பதவி விலகியுள்ளார்.
தொழிற்துறையில் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கப் பெறும் போது அதற்கு நாம் இடமளித்துள்ளோம்- என்றார்.