இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தரைவழிப் பாதையை அமைக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலமொன்று இருந்தது என்னும் புராணிக கதையுண்டு. அதை இராமர் கட்டியதான நம்பிக்கை உண்டு.
ஆனால், விஞ்ஞானரீதியான ஆய்வுகளின்படி ஆரம்பத்தில் கடலுக்கு மேல் தெரியக்கூடியவாறான தரைவழித் தொடர்பு இருந்திருக்கின்றது – அதுவே பின்னர், இயற்கையான மாற்றங்களால் கடலுக்குள் சென்றுவிட்டதாகக் கணிக்கப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாகத் தொடர்புபடுத்தும் விடயம் தொடர்பில் பலவாறான முரண்பாடான கருத்துகள் உண்டு.
ஆனால், அனைத்துக்கும் அப்பால் அவ்வாறானதொரு தொடர்பு இருந்திருக்கின்றது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான சான்றுகள் இருக் கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தனது புதுடில்லிக்கான முதல் பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்க குறித்த பாலம் தொடர்பில் பேசியிருந்தார். அரசாங்கம் அவ்வாறானதொரு பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ரணில் இதனை முதன்முதலாக இப்போது கூறவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்துக்குமான சமாதான உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர், 2002 ஜூனில் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு பயணம் செய்திருந்தார். அப்போதும் இது தொடர்பில் பேசியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாலம் நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முடிந்துவிட்டன என்றும் இந்திய திட்டக் குழு மற்றும் இலங்கையின் கொள்கை மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகத் தனியார் துறை நிபுணத்துவம் மற்றும் முதலீடுகளை உள்வாங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இரண்டு தரப்புகளும் இணங்குகின்றன எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவற்றை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ரணிலின் வாழ்வில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதி சந்தர்ப் பமாக அமையப்போகும் 2024 ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவாரா அல்லது முன்னரைப் போன்று இறுதி நேரத்தில் தோற்கடிக்கப்படுவாரா என்னும் கேள்விகளுக்கு மத்தியில்தான் தரை வழித் தொடர்பை ஏற்படுத்தும் திட்டத்தில் ரணில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
2002இல் ரணில் முன் மொழிந்த விடயத்தை இன்றுவரையில் முன்னெடுக்க முடியவில்லை இவ்வா றானதொரு பின்னணியில் மீண்டும் தரைவழித் தொடர்பு பற்றிய நம்பிக்கைகள் மேலோங்கியிருக்கின்றன.
சிங்கள கடும்போக்கு தரப்புகளின் அச்சங்களை மீறி இதனை சாத்தியப்படுத் தத் தன்னால் முடியுமென்று ரணில் நம்புகின்றாரா? – ரணிலால் இதனை சாத்தியப்படுத்த முடியுமென்று இந்தியா நம்புகின்றதா? பதில்களை கண்டுபிடிப் பது கடினமானது. ஆனால், அவ்வாறானதொரு தரைவழித் தொடர்பு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கட்டாயம் தேவையானது.
இதனால், அதிகம் இலங் கைக்கே நன்மை உண்டு. அவ்வாறான தரைவழித் தொடர்பு இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை கொண்டு சென்றுவிடும் என்பவர்கள் உள்ள னர். இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்போரும் உள்ளனர். ஆனால், இவ்வாறான வாதங்கள் தர்க்க ரீதியில் பலவீனமானவை.
ஏனெனில், இப்போது தரைவழித் தொடர்பில்லை. ஆனாலும், இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தில்தானே கிடக்கின் றது. இந்த நிலையில் சுயாதீனமாக பொருளாதார ரீதியில் எழுச்சியுற முடியாத இலங்கை பொருளாதார நிலையில் பெரும் எழுச்சியடைந்துவரும் – இன்னும் சில வருடங்களில் உலகின் மூன்றாம் நிலை பொருளாதார சக்தியாக எழுச்சி யுறப் போகும் இந்தியாவுடன் இணைந்து நின்றால் நன்மையை இலங்கை மக்கள்தான் அறுவடை செய்வர்.