பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு புயலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உடனடியாக விமானத்திலிருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் விமானம் விபத்துக்குள்ளானமை தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியமை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.