புளோரிடாவில் வாழ்ந்துவரும் இலங்கையரான டிலன்க ஷெஹான், திறந்தவெளி நீச்சல் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான புளோரிடாவில் நடைபெற்ற புளோரிடா கோல்ட் கோஸ்ட் திறந்த வெளி நீச்சல் நிகழ்ச்சிகளில் ஒன்றான 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியிலேயே அவர் இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 கிலோ மீட்டர் தூர நீச்சலை அவர் ஒரு மணித்தியாலம் 17 செக்கன்களில் நீந்திக்கடந்து இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் தனது முன்னைய சாதனையான ஒரு நமணித்தியாலம் 42 செக்கன் என்ற சாதனையை அவர் புதுப்பித்துள்ளார். இப் போட்டி புளோரிடாவில் அண்மையில் நடைபெற்றது. ஆண்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர திறந்த வெளி நீச்சல் போட்டியில் டிலன்க ஷெஹான் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
தோஹாவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற உலக நீர்நிலை சாம்பியன்ஷிப்பில், அவர் நிலைநாட்டிய இலங்கைக்கான முந்தைய தேசிய சாதனையான 1 மணித்தியாலம் 42 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியுடன் ஒப்பிடுகையில் தற்போதை நேரப் பெறுதியில் பெரு முன்னேற்றத்தை அவதானிக்க முடிகிறது.
புளோரிடா கோல்ட் கோஸ்ட் திறந்த வெளி 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் மெக்ஸிமிலியானோ பெக்கோட் (58 நி. 56 செக்.) முதலாம் இடத்தையும் மரியொ க்ரான்ஸியோ (59 நி. 30 செக்.) இரண்டாம் இடத்தையும் ஆமி பேல் (59 நி. 31 செக்.) மூன்றாம் இடத்தையும் 18 வயதுடைய டெனியல் கொன்ஸாலஸ் (59 நி. 35 செக்.) நான்காம் இடத்தையும் பெற்றனர்.
அவர்களைத் தொடர்ந்தே டிலன்க ஷெஹான் 5ஆவது இடத்தைப் பெற்றார்.தோஹாவில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உலக நீர்நிலை சம்பியன்ஷிப்பில் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியை டிலன்க ஷெஹான் ஒரு மணித்தியாலம் 43 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் தெற்காசியாவில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தார்.அப் போட்டியில் இந்தியாவின் மஞ்சுநாத் ஹயமகளூர் (57 நி. 43 செக்.) முதலாம் இடத்தைப் பெற்றார். அப் போட்டியில் டிலன்க ஷெஹான் பதிவுசெய்த நேரப் பெறுதியானது ஆசியாவில் 10ஆவது இடத்திற்குள் உள்ளடங்கியிருந்தது.