மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை – மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகாதார உதவியாளராவார் எனவும், அவரிடமிருந்து 5 கிராம், 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 10 கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பொதி செய்து விற்பனை செய்வதாக நுகேகொடை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனசாந்த கஹடதெனியவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரை சோதனை செய்ததில் சிறிய பொட்டலங்களில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.