பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் அகதிகளாக இந்தியா – தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 8 பேர் மரைன் பொலிஸாரால் மீட்கப்பட்டனர். தனுஷ்கோடி அடுத்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மரைன் பொலிஸார் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த எண்மரும் யாழ்ப்பாணம், மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் நேற்று இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கியதும் தெரியவந்துள்ளதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.