கிராமப் புறங்களில் பாரிய பிரச்னையாக விளங்கும் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நவீன செயல்திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யானை மற்றும் காட்டில் வாழும் உயிரினங்கள் தங்களுக்கான உணவுகளைக் காடுகளிலேயே பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
காட்டு எல்லைக்கு அப்பால், மனிதர்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்குப் போக முடியாதவாறு மின்சார வேலிகளை அமைத்தால். அதாவது இந்த வேலிகள் முன்னர் இருந்ததை விடவும் வினைத்திறன் மிக்கவை. அதி நவீன உபகரணங்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளன.
இந்த மின்சார வேலிகள் உயர் மின் அழுத்தம் கொண்டதுடன், 7 அடி உயரமிக்கவை.
இந்த வேலைத்திட்டதை எதிர்வரும் மே மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன் முதற்கட்டமாக 1000 கிலோ மீற்றர் வரையான மின்சார வேலிகளை அமைக்கத் தீர்மானித்துள்ளோம்.
எமது பணிகளுக்குப் போதுமான ஆளணி பலம் இன்மையால், முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இதன்படி வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புப் படையும், அம்பாறை மாவட்டத்தில் இலங்கைக் கடற்படையும், அநுராதபுரம் மாவட்டத்தில் இலங்கை இராணுவப் படையும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை விமானப்படையும் வேலைகளில் ஈடுபடவுள்ளன.
மின்சார வேலிகளை அமைக்கும் இந்த வேலைத்திட்டதில் ஒவ்வொரு 10 கிலோ மீற்றருக்கும் காவல் அரண்கள் அமைத்து, அதில் இருவரை எந்நேரமும் காவலில் ஈடுபடுத்தவுள்ளோம்.
இவ்வாறு செயல்படுத்துவதால் யானை – மனித மோதல்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.
இதற்காகப் பயன்படுத்தப்படும் உயர் ரக பொருள்களிலிருந்து சாதாரண ஆணி வரையான சகல பொருள்களும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடமிருந்தே பெற்றுகொள்ளப்படும்- என்றார்.
இந்த வேலைத்திட்டத்தில் வன ஜீவராசி மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புபட்ட திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் எனப் பலவும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளன.