வாய்விட்டுச் சிரிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்று பொது வாகச் சொல்வார்கள். விஞ்ஞான பூர்வமாக அது சரியானதா என்பது இந்த ஊர்க்குருவிக்கு தெரியவில்லை. ஆனால், ஒரு நாள் வாய்விட்டுச் சிரித்தபோது – சிரிப்பை அடக்கமுடியவில்லை.
ஆனால், திடீரென்று மாரடைப்பு வந்ததுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது. இதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றார்களோ தெரிய வில்லை. என்னடா இப்படியெல்லாம் சிரிப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார் ஊர்க்குருவியார் என்று நீங்கள் நினைக்கலாம்.
இன்று காலை லண்டனிலி ருந்து பிரமுகர் ஒருவரிடமிருந்து வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. அதுபோன்ற செய்தியை ஏதாவது சமூகவலைத்தளங்களில் கண்டிருந்தால் அதனைக் கண்டு கொண்டிருக்கவே போவ தில்லை. ஆனால், அதனை அனுப்பிய பிரமுகர் இந்த ஊர்க் குருவியின் மரியாதைக்குரிய ஒருவர். அவரின் அரசியல் கருத்துகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்மீது ஒரு மரியாதை உண்டு.
அதனால், அதன் முக்கியத்துவம் சற்று அதிகமாகியதால் அதுபற்றி எழுதவேண்டும்போல இருந்தது. அதனைப் படிக்கின்றபோது நிச்சயம் உங்களுக்கும் சிரிப்பு வரும். அடக்கமுடியாமல் சிரிப் பீர்கள் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது நல்லது என்று பட்டதால் அதனை எச்சரிக்கையாகத் தந்தேன்.
அவ்வவளவுதான். இனி அந்த லண்டன் பிரமுகர் அனுப்பிய ஓர் அறிவித்தல் செய் தியை அப்படியே கீழே தருகின் றேன். ‘சுவிஸ் தமிழ் மக்களே உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: உயிருக்காகப் போராடும் நிலை யில் இருக்கும் தமிழீழத் தேசியத் தலைவரை சந்தித்து ஆரத்தழுவ வேண்டுமா?
இதோ முந்துங்கள் முதல் வரும் பத்து பேர் தமிழீழ தேசி யத் தலைவரை சந்தித்து ஆரத் தழுவி உணவு உண்ணும் அற்புத வாய்ப்பைப் பெறலாம். தமிழீழத் தேசியத் தலைவரை சந்தித்து ஆரத்தழுவ அறுபது ஆயிரம் சுவிஸ் பிராங்க். மேலதிக விவரங் களுக்கு உலகத்தமிழர் ஒருங்கி ணைப்புக்குழு’ இதுவே அந்த செய்தி. ‘டூப்ளிக்கெற்’ துவாரகாபோல யாரோ ஒருவரின் படத்தைப் போட்டு விளம்பரம். சில நிமிடங்கள் நீங்கள் சிரித்து முடித்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
இந்த ஊர்க்குருவியும் உங்க ளைப் போலத்தான் கொஞ்ச நேரம் சிரித்து முடித்தபின்னர், ஆற அமர இருந்தபோதுதான் – நமது இனத்தை நினைத்து வேதனை ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை. தங்களை விட்டால் இந்த உலகத்திலேயே அறிவானவர்கள் இருக்கமாட்டார்கள் என்று மார்தட்டிய தமிழ் இனம், இன்று எப்படியெல்லாம் சீரழிந்து விட்டது என்பதை நினைக் கின்ற போது வேதனைதான். சரி இனி இன்று சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றோம்.
லண்டனிலிருந்து பிரமுகரி டம் வந்த வட்ஸ்அப் செய்தி போலவே தெற்கின் அரசியல் பிரமுகர் ஒருவரிடமிருந்தும் ஒரு செய்தி வந்திருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கடந்த ஜூலை முத லாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடத்திய கருத்துக்கணிப்பு விவரம் அது. இது போன்ற கருத்துக்கணிப் புகளை இந்த ஊர்க்குருவி நம்புவ தில்லை என்பது வாசகர்களுக்குத் தெரிந்ததுதான்.
ஆனாலும் இந்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்மீது இருக்கின்ற கவனம் சற்று வித்தியாசமானது என்பதால் அந்தக் கருத்துக் கணிப்பைப் பார்க்கலாம் என்று தோன்றியது. ‘உங்கள் குடும்பத்தின் உட னடி – தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்ய யார் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?’
என்ற கேள்விக்கு பதில ளித்தவர்களில் இருபத்தி நான்கு தசம் மூன்று வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கம் பத்தொன்பது தசம் மூன்று வீத மானவர்கள் சஜித் பிரேமதாஸ வுக்கும் பதினைந்து தசம் ஐந்து வீதமானவர்கள் அநுரகுமார திஸ நாயக்காவுக்கும் ஆதரவாகக் கருத்து சொல்லியிருக்கின்றனர்.
பன்னிரண்டு வீதமானவர்கள் தெரியாது என்றும் இருபத்தி எட்டு தசம் எட்டு வீதமான வர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனராம். இதேவேளை, இன ரீதியான கருத்துகளில், சிங்கள மக்களில் முப்பத்தி மூன்று வீதமானவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித் துள்ளனர். அண்ணளவாக நாற்பது இலட்சம் சிங்கள மக்கள் இந்த மூன்று பேர் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது கவனத்திற்குரியது. இந்தக் கருத்துக்கணிப்பு பதின்மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்ட நாட்டில் வெறும் ஆயிரத்து முன்னூற்றி ஐம்பத்தி இரண்டு பேரிடமே கருத்துக் கேட்கப் பட்டு வெளியிடப்பட்டிருப் பதும் கவனிக்கவேண்டியது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இந்த கருத்துக்கணிப்புகளை நிச்சயம் நாம் கவனத்தில் எடுக்கமுடியாது என்றாலும் இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகள் எல்லா வற்றிலும் மூன்றாவது ஆளாக இருந்த தற்போதைய ஜனாதிபதி தற்போது முதலிடத்துக்கு வந்திருக்கிறார் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும் இவர்கள் மூவர் மீதும் இன்னமும் நம்பிக்கை கொள்ளாத சுமார் நாற்பது வீதமானவர்கள் கடை சியில் இவர்களில் ஒருவருக்குத் தான் வாக்களிக்கவேண்டும் என்பதால் அவர்களின் முடிவு தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கவிருக்கின்றதோ?
– ஊர்க்குருவி.