29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

இரா. சம்பந்தன் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்தானா என்ற சர்ச்சை இரண்டு நாட்களாக ஓடத்தொடங்கியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழரசுக் கட்சி முடிவெடுத்த பின்னரும், தமிழரசு கட்சி இப்போதும் கூட்டமைப்பில்தான் இருக்கின்றது என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்பாகச் சேர்ந்து இயங்குவோம் எனவும் தமிழரசுக்காரர்கள் திரும்பத் திரும்பக்கூறி மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஏன் அப்படிக் குழப்புகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் அறிவு தேவையில்லை.
இதுகாலவரை, எல்லா தேர்தல்களிலும், ஒற்றுமைக்காகக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைத் தூண்டிய தமிழரசுக்காரர்களே, இப்போது தமது தனிப்பட்ட நலன்களுக்காக அதே ஒற்றுமையைக் குலைத்து வெளியேறித் தனித்துத் தேர்தலைச் சந்திப்பது மக்களிடத்தில் எந்தளவுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டபின்பே, அப்படி அவர்கள் குழப்பிப் பேசுகிறார்கள்.
கூட்டமைப்பின் தலைவர் இப்போது யார் என்பதைக் கூட்டமைப்பே இன்னமும் முடிவுசெய்யவில்லை.
அவர்கள் அதற்கு இப்போது அவசரப்படவில்லை.
வேட்பாளர் தெரிவு, வேட்மனு தாக்கல் மற்றும் வேட்பாளர்களுக்கு அறிவூட்டல் போன்ற விடயங்களில் தமது கவனத்தைச் செலுத்திவரும் கூட்டமைப்பினர் – தலைமைத் தெரிவில் காலத்தைச் செலவிடாமல் தமக்கிடையே புரிந்துணர்வுடன் தேர்தலை நோக்கி இயங்கி வருகின்றனர் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.
கூட்டமைப்பில் இருந்து தமிழரசு தனித்துப் போகின்ற முடிவை எடுத்த பின்னர் இப்போது கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக்கொண்ட அமைப்பாகிவிட்டது.
எதிர்காலத்தில், தேர்தலுக்கு பின்னர் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி மீண்டும் வந்து சேர்ந்து இயங்குவதென்றாலும், அந்த ஐந்து கட்சிக் கூட்டணியோடு ஆறாவது கட்சியாக வந்து சேர்ந்துதான் இயங்கவேண்டும்.
அதுவும், தற்போது பதிவு செய்யப்பட்ட – ஒரு கட்சி ஆகிவிட்ட கூட்டமைப்பின் ‘குத்துவிளக்கு’ சின்னத்திலேயே இயங்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாகத் தமது ‘வீடு’ சின்னத்தை தமிழரசுக்காரர்கள் காட்ட முடியாது.
இந்த நிலைமையில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போதும் சம்பந்தனே தலைவர் என்று தமிழரசின் சிரேஷ்ட துணைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஒரு வியாக்கியானம் கூறியிருக்கின்றார்.
அவர் சொன்னதை அப்படியே தருகின்றேன்:
‘பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அவற்றின்
பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர்.
அது முன்பும் அவ்வாறே நடந்தது.
ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில்தான் இருக்கின்றார்.
ஆகவே, அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவியை வறிதாக்குவதோ வெறுமனே ஓர் ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது.
முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர, பதவி வறிதாக்கல், செயலற்றுபோதல் என்று எதுவும் இல்லை.’ – இப்படித்தான் சிவஞானம் தெரிவித்திருக்கிறார்.
2020ஆம் ஆண்டு தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சியின் தேர்தல் சின்னமான ‘வீடு’ சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தமது தலைவராகச் சம்பந்தனைத் தெரிவுசெய்தது.
அவ்வாறு அவர் தெரிவு செய்யப்பட்டது பாராளுமன்றத்துக்குத் தெரிவான கூட்ட மைப்பு உறுப்பினர் குழாமின் தலைவராக மட்டுமே.
அவரே இப்போதும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர்.
அதில் குழப்பம் எதுவும் இல்லை.
இங்கே, பிரச்னை என்னவென்றால் – மூன்று கட்சிகள் இருந்த கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்துப் பிரிந்து சென்று, தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுக்கொண்டு, தாம் இப்போதும் கூட்டமைப்புத்தான் என்று
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பது மக்களை மடையர்கள் என்று நினைப்பதற்குச் சமம்.
தமிழரசு கட்சி என்ற ஒரு மூத்த அரசியல் கட்சிக்கு இது அழகல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனியான கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அதன் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன.
ஆனால், தமிழரசு அதற்கு மறுத்துவந்தது.
அப்படி அது பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட அந்தக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தால் – தமிழரசு கட்சி இப்போது வாதிடுவதிலும் ஒரு சிறிய நியாயம் இருந்திருக்கும்.
சம்பந்தன், தமிழ் இனத்தின் ஒரு மூத்த மதிப்புக்குரிய தலைவர்தான்.
அதில் சந்தேகமில்லை.
ஆனால், அதற்காக, அவரின் கட்சி கூட்டமைப்பை விட்டே வெளியேறிய பின்னரும், அவரே இப்போதும் கூட்டமைப்பின் தலைவர் என்று அடம்பிடிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.
அவரின் கட்சிக்காரர் அவரையே அவமதிக்கும் ஒரு செயல் அது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் – உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தபோது – வேட்புமனுக்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்க, தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் அலுவலக்தில், கட்சியின் தலைவரும், சிரேஷ்ட துணைத் தலைவரும், இன்னும் சிலரும் காத்திருக்க, அவர்களுக்கே தெரியாமல், சுமந்திரனின் யாழ்ப்பாண இல்லத்தில் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்டு, அங்கிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட விநோதத் தகவலை இந்தப் பத்தியில் விபரித்திருந்தேன்.
தமிழரசு கட்சியின் உள்வீட்டுச் சீத்துவக்கேடு இந்த இலட்சணத்தில் இருக்க, தாங்கள் தான் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தலைவர்கள் என்று தமக்குத் தாமே அவர்கள் கொம்பு சீவிக்கொண்டிருப்பது சிரிப்புக்கிடமானது.
முதலில், தமிழரசு கட்சி, சிற்றரசர்கள் போலப் பிரிந்து கிடக்கும் தனது கட்சிக்காரர்களை ஒன்றிணைத்து ஆளுமையான தலைமையோடு பயணிக்க வேண்டும்.
அதற்குப் பின்னர், வேண்டுமானால், ஏனைய அனைத்து கட்சிகளின் கூட்டுக்கு தலைமை வகிக்கத் தனக்கு இருக்கும் தகுதி பற்றி அது பேசலாம்.
தர்மலிங்கம் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வழங்கும் தலைமைக்கு, அவர்களின் கட்சிக்காரர்கள், எவ்வளவு ஒருங்கிணைப்புடன் கட்டுப்பட்டு நடக்கின்றார்கள் என்பதிலிருந்து தமிழரசு கட்சியினர் பாடத்தை கற்க வேண்டும்.
முத்தாய்ப்பாக ஒரு தகவல் சொல்கிறேன்: கூட்டமைப்பை விட்டு வெளியேறி, உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று அதன் மத்திய குழு மட்டக்களப்பில் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பாகப் பேசி ஒரு முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேசினார்கள்.
கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தாம் தனித்து போட்டியிடும் முடிவை அங்கு அறிவித்தனர் தமிழரசு கட்சியினர்.
அப்போது – தாம் எவ்வாறு போட்டியிடப்போகின்றோம் என்பதைத் தமக்குள் பேசித் தீர்மானிப்பதாக அறிவித்துவிட்டு வெளியேறினர் கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளி கட்சிகளான புளொட்டும் ரெலோவும்.
இவ்வாறு – தமிழரசு பிரிந்து போவதென்று முடிவாகி ஏனைய இரண்டு கட்சியினரும் சேர்ந்தே போவர் என்பதும் தெளிவாகிய அந்த கட்டத்தில், தமிழரசு கட்சியினரைப் பார்த்து சம்பந்தன் கேட்டாராம்: ‘அப்படியென்றால், தமிழரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வெளியேறுகின்றதா?!’ என்று.
ஆக, ஐயா சம்பந்தன் தனது நிலை குறித்துத் தெளிவாகத்தான் இருக்கிறார்.
அவரின் சீடர்கள்தான் தாங்களும் குழம்பி – மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles