இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து அதிகாலை அலரி மாளிகையை விட்டு, வெளியேறியபோது அவர்
மீண்டும் அலரி மாளிகைக்கு வருவார் என்று அவர்கூட நினைத்திருக்கமாட்டார்.
ராஜபக்ஷக்களின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றே எல்லோரும் ஆரூடம் கூறினர்.
ஆனால், உடனேயே சுதாகரித்துக்கொண்ட ராஜபக்ஷ குடும்பம், அரசியலில் விட்ட இடத்தை பிடிக்க திட்டமிடத் தொடங்கியது.
அதிலும், குறிப்பாக கோட்டாபய தன்னை முன்னிறுத்தி ‘வியத்மக’ போன்ற அமைப்புகளை ஆரம்பித்து சிங்கள தேசியவாதத்தை விதைக்கத் தொடங்கினார்.
பின்னர், அவர் அதனை அறுவடை செய்ததையும் கண்டோம்.
அவரின் இந்த வளர்ச்சியின் பின்னால் அவருக்கு ஆதரவாக நின்றது சிங்கள ஊடகங்களில் முதன்மை ஊடாகமான ஓர் ஊடக வலையமைப்புத் தான்.
அதனால்தான் அந்த ஊடக வலையமைப்பின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நெருக்கமானவராக அப்போது வலம் வந்தார்.
அண்மையில், அவர் வழங்கிய ஊடக செவ்வி ஒன்று தெற்கில் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.
மிகச்சிறிய அளவில் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அறகலய’வை ‘கோட்டா கோ ஹோம்’ என்று பெயரிட்டு அதனை பிரபல்யப்படுத்தியது மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷதான் என்ற செய்தியை அவர் அந்த செவ்வியில் தெரிவிக்கப்போய் அதுவே இன்று தெற்கின் பேசுபொருளாகியிருக்கின்றது.
கோட்டாவுடனான தமது குடும்பச் சண்டையில் அவர்கள் பத்த வைத்த நெருப்புத்தான், பின்னர் பற்றி எரிந்து அவர்கள் குடும்பத்தையே சுட்டெரித்துவிட்டது என்பதுதான் தெற்கில் இன்று பேசப்படும் செய்தி.
மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட ‘அறகலய’ போராட்டத்தை ‘கோட்டா கோ ஹோம்’ என்ற பெயரில் யார் பிரபல்யப்படுத்தியிருந்தாலும், அதன் பரிணாம வளர்ச்சியில் மக்களின் கோபமே முக்கிய பங்குவகித்தது.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களும் எரிவாயுவைப் பெறமுடியாதபோது மீண்டும் மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாறியவர்களுக்கு மண்ணெண்ணெயும் கிடைக்கவில்லை.
பால்மா முதல் பருப்பு வரை அனைத்துக்குமே வரிசையில் நின்ற மக்கள் இந்த அறகலயகாரர்களுடன் தாமும் வீதிக்கு வந்தனர்.
அதனால் அறகலயகாரர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக எழுச்சிபெற்றது.
அவர்களை வழிநடத்த யாரும் இருக்கவில்லை.
அதனால், அவர்கள் ஜனாதிபதி மாளிகையையும் பிரதமர் வாசஸ்தலத்தையும் முற்றுகையிட்டனர்.
அப்படியொரு முற்றுகை நடந்திருக்காவிட்டால் கோட்டா பயவோ, மகிந்தவோ ஆட்சியிலிருந்து போயிருக்கமாட்டார்கள் என்பது வேறு சங்கதி.
ஆனால், அந்தப் போராட்டக்காரர்களை வழிநடத்த ஆட்கள் இல்லாததாலேயே அது பின்னர் காணாமல் போனது.
மே ஒன்பதாம் திகதி மகிந்தவை பதவியில் இருந்து இறக்கிய போராட்டம் வெற்றி பெற்றதால் அதற்குப் பின்னர் வந்த ஜூன் ஒன்பதை இலக்கு வைத்து போராட்டகாரர்கள் போராட, அன்று பஸில் பதவி விலகினார்.
இதனால் உற்சாகமடைந்த போராட்டக்காரர்கள் ஜூலை ஒன்பதை இலக்கு வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த, அன்றைய தினம் கோட்டாபய
வீட்டை விட்டு அல்ல நாட்டை விட்டே ஓடவேண்டியதாயிற்று.
போராட்டகாரர்கள் கோட்டா கோ ஹோம் என்று பெயர்வைத்து போராட்டத்தை தொடங்கியதால், (அது யோசித வைத்த பெயராக இருந்தாலும்) கோட்டாபய நாட்டைவிட்டு போனதும் அதனை தொடர அவர்களுக்கு வேறு நியாயம் இருக்கவில்லை.
ரணில் கோ ஹோம் என்ற அவர்களின் அடுத்த கோஷம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
இப்போது உள்ளூராட்சி தேர்தலுக்கு திகதியிடப்பட்டு விட்டது.
அதுவும் ஓர் ஒன்பதாம் திகதிதான்.
அதனால் சிலர் மார்ச் ஒன்பதாம் திகதியுடன் ரணில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்கின்றனர்.
குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடைபெறுமா என்பது இன்னமும் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாவிட்டாலும் – அப்படி தேர்தல் நடைபெற்றாலும் அது இந்த அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை.
மக்கள் இந்த அரசை நிராகரித்து விட்டனர் என்பது இந்தத் தேர்தலின் மூலம்தான் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதல்ல.
ஏற்கனவே, மக்கள் அதனை வெளிப்படுத்தி விட்டனர்.
இந்தத் தேர்தல் வேண்டுமானால், அடுத்து நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் பற்றியோ அல்லது பாராளுமன்ற தேர்தல் ஒன்று பற்றியோ ஒரு கருத்துக்கணிப்பாகத்தான் இருக்கும்.
ஆனால், தேர்தல் நடைபெறாமல் விட்டால் மக்களை வீதிக்கு இறக்கி போராடப் போவதாக இப்போது எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
சில தொழில்சங்கங்களும் அடுத்த பெப்ரவரியில் இதே ஒன்பதாம் திகதி போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
அறகலயகாரர்களின் அந்த அதே ‘ஒன்பதை’ தொழில்சங்கங்கள் தெரிவுசெய்தாலும், மாபெரும் போராட்டத்துக்கு தேர்தல் ஒன்றுக்காக வீதிக்கு இறங்கினால் மக்கள் அதற்காக வீதிக்கு இறங்குவார்களா என்பது தெரியவில்லை.
மக்களுக்குத் தேர்தலை விட முக்கியமான பல தேவைகள் இருக்கின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம்.
என்ன நடக்கின்றது என்று.!
- ஊர்க்குருவி